இந்திரனும் சிறுகுரங்கும்!
நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர்
செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க
காணுகிறோம். இந்நிலைமை ஏன்?
சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு
உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று
வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?
சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக
இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும்,
பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு
காரணம் என்ன?
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில்
இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக
எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.
இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.
இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை.
கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!
மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.
இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.
“பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை
........”
- சீவக சிந்தாமணி (2815)
என் உரை:
தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச்
செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை,
தீவினைப் பயன்களாலேயாம்.
அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.
”அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே”
அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர்
என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே
என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள்
என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.
“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”
இரா.பானுகுமார்
3 comments:
நம் இன்றைய நிலைக்கு ஊழ்வினை முக்கிய காரணம் என உணர்ந்து இனி நம் வாழ்வில் நல்வினையை தேர்ந்து செய்வோம்.
வழிகாட்டியாய் உள்ள இந்த இடுகையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..
வாழ்த்துகள்..
இப்போது சமணர் தமிழகத்தில் உள்ளார்களா ? வழிபாடு இடஙகள் உள்ளனவா? பின்பட்றுவோர் யாரும் இல்லை என்றே எண்ணி இருந்தேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment